/indian-express-tamil/media/media_files/2025/07/29/polytechinc-students-2025-07-29-07-48-13.jpg)
தமிழகத்தில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கு அபராதக் கட்டணமின்றி தேர்வுக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளன. இந்த தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16 ஆகும். அதேநேரம் அபராத கட்டணம் ரூ.150 செலுத்தி செப்டம்பர் 17 (இன்று) ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும், அபராத கட்டணம் ரூ.750 செலுத்தி செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், அபராதமின்றி தேர்வுக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில் நுட்பக் கல்வி ஆணையருமான இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் தேர்வுக்கு எந்த விதமான அபராத கட்டணமும் செலுத்தாமல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரையும், ரூ.150 அபராத கட்டணம் செலுத்தி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையும், அபராத கட்டணம் ரூ.750 செலுத்தி செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.
முதல் செமஸ்டர் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் மாணவர்களுக்கும் கடைசி வேலை நாள் அக்டோபர் 3 ஆம் தேதி என்பதற்கு பதிலாக, அக்டோபர் 17 ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் செமஸ்டர் தேர்வுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு விரிவான அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.