/indian-express-tamil/media/media_files/2025/09/07/dpi-2-2025-09-07-20-45-41.jpg)
பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்று நட்டு, புகைப்படம் எடுக்க வேண்டும். அதனை இணையதளத்தில் பதிவேற்றம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை மற்றும் மிஷன்லைஃப் இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் நெறியில் பயணிக்க ஒரு சிறந்த வழியாக அமையும். ஒவ்வொரு மாணவனும் மற்றும் மாணவியும் பசுமையை பேணும் ஒரு செயலில் நேரடியாக பங்கேற்கும் வகையில், கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழல் பகுதிகளில் நட வேண்டும். அவ்வாறு மரக்கன்றை நட்டுவைத்த பின்னர் தாய் மற்றும் பாதுகாவலருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை https://ecoclubs.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை இயக்க குழு பொறுப்பாசிரியர், மாணவர் தூதர்கள் மற்றும் குழு மாணவர் தலைவர்கள் (House Captains) திட்டமிட்டு இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும். மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் அடிப்படையில் போட்டித் தன்மை உருவாக்கி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இது மாணவர்களின் ஆர்வமுள்ள பங்கேற்பை ஊக்குவிக்கும். மாவட்ட மற்றும் வட்ட அளவிலான ஒருங்கிணைப்பு, தங்களது மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் இடைநிலை, தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் உடனடியாக கூட்டம் நடத்தி, இந்நிகழ்வின் நோக்கமும், அவசியமும் குறித்து விவாதிக்க வேண்டும்.
கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுடன் கூட்டம் நடத்தி, மரக்கன்று நடுதல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இந்நிகழ்வு, ஒரே நாளில் ஒவ்வொரு வட்டத்திலும் நாளைக்குள் செயல்படுத்த வேண்டும். மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்களின் பங்காக, வனத்துறையுடன் இணைந்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் தன்னார்வ அமைப்புகள் உடன் இணைந்து செயல் திறன் ஆதரவை பெற வேண்டும். மாணவர்கள் புகைப்படங்கள் அனைத்தும், இணையதளத்தில் சரியான முறையில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர் ஒவ்வொருவருக்கும் பசுமை இயற்கைக்கு, செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழில் மின் சான்றிதழ்கள் உருவாக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மரக்கன்று நடுதல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும். நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரமும், மாணவர்களின் உள்ளத்தில், ஒரு பசுமை எண்ணத்தை விதைக்கும் என்பதால் இப்பொருள் சார்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.