அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நிர்ணயத்தில் உபரியாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டன. அவை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டன. இதற்கிடையே 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வழங்கக் கோரி சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கருத்துருக்கள் சமர்பிக்கப்பட்டன.
அதையேற்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தொகுப்பில் இருந்து 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. அதன்படி ஆங்கிலம்-2, கணிதம்-6, வேதியியல்-4, தாவரவியல்-3, வணிகவியல்-9 பணியிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
அதன்விவரங்களை பதிவேட்டில் பதிவுசெய்து முறையாக பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“