/tamil-ie/media/media_files/uploads/2023/07/DPI.jpg)
9, 10 ஆம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களில் திருத்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளி பாட புத்தகங்களில் தவறாக உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த தேதி உட்பட சில தவறுகளை திருத்தம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடப் புத்தகங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வி பாடநூல்களில் ஆண்டுதோறும் சிறிய அளவிலான பிழைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், நடப்பு கல்வியாண்டில் (2024-25) வழங்கப்பட்ட 9, 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சில திருத்தங்கள் இருப்பதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வரலாறு பிரிவில் தொழிற்புரட்சி காலத்தில் முக்கிய கண்டுபிடிப்புகள் பத்தியில், கம்பியில்லா தகவல் தொடர்பை தாமஸ் ஆல்வா எடிசனும், ஒளிரும் மின்விளக்கை மார்கோனியும் கண்டுபிடித்ததாக தவறாக இருக்கிறது. அதை கம்பியில்லா தகவல் தொடர்பை மார்கோனியும், ஒளிரும் மின்விளக்கை தாமஸ் ஆல்வா எடிசனும் என்று திருத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், 9 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் பொருளியல் பிரிவில் பணம் மற்றும் கடன் பத்தியில் 2-வது பத்தி முழுவதையும் நீக்க வேண்டும்.
இதுதவிர நடப்பாண்டில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் கருணாநிதி மறைந்த தேதியை ஜூலை 7 ஆம் தேதி என்று தவறாக பதிவிட்டுள்ளனர். அதை ஆகஸ்ட் 7 ஆம் தேதி என திருத்தம் செய்து கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.