தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்பமாறு துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சுப் பணியாளர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.
அந்தப் பட்டியலில் இடம்பெறும் பணியாளர்கள் 2024 டிசம்பர் 31-ம் தேதிக்குள் குறிப்பிட்ட பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பும், பி.எட் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உதவி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீது துறை சார்ந்து எவ்வித புகார்களும், நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாதவாறு உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.