தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆகஸ்ட் 7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
இதற்கான சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.