கொரோனா பெருந்தொற்று முடக்கநிலையால் தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை இன்னும் நடைபெறமால் உள்ளன. மாணவர்கள் 11-ம் வகுப்பில் உரிய பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கும், பாலிடெக்னிக் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கும், TNPSC உள்ளிட்ட தேர்வுகள் எழுதுவதற்கும் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானதாக கருதப்படுவதால் தேர்வை நடத்துவதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.
முன்னதாக, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வை வரும் ஜூலையின் முதல் இரண்டு வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளாதாக மனித வள மேம்பாடு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10 வகுப்பு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில் , " 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று பதிவு செய்யப்பட்டது.
மேலும், +2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஜூன் மாதத்தில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த ஆண்டு +2 தேர்வு மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 24 தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடைசித் தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். எனவே, தமிழகத்தில் +2 பொதுத்தேர்வும் இன்னும் முழுமையடையாத நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு 26 ஜுலை 2020இல் நடைபெறும் என்றும், அதே போன்று ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, ஜூன் மாத இறுதிக்குள் 2 பொதுத்தேர்வு நடத்தி முடித்து மதிப்பெண் சான்றிதழை வழங்கவேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
எப்போது பள்ளிகள் திறக்கும்:
26.04.2020 அன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையில், " இதை நாம் எப்போதும், என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டும். நான் மேலும் ஒருமுறை கூறுகிறேன். இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம். உங்கள் அனைவருக்கும் சிறப்பான உடல்நலம் வாய்க்கட்டும்" என்று கூறி தனது உரையை முடித்தார். எனவே, தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் இந்த இரண்டு மீட்டர் (கிரீஸ் நாட்டில் ஐந்து மீட்டர்)இடைவெளியைக் கட்டாயம் பின்தொடர வேண்டிய சூழல் உள்ளது.தற்போது, 40 மாணவர்கள் கொண்ட வகுப்பறை 20 மாணவர்களை மட்டும் உட்கார வைக்க முடியும். எனவே, வகுப்பறையை அதிகரிப்பதா? இல்லை பல கட்டங்களாக (காலை 20, மாலை 20 ) மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதா? போன்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை யோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இன்னும் அந்த பரிந்துரை குழுவை தமிழக அரசால் அமைககப்பட வில்லை. எனவே, அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தல் ஜூலை இறுதியில் (அ) ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏப்ரல் - 28 அமைச்சர் ட்வீட்) .
மேலும், வகுப்பு நேரம் எவ்வளவு குறைகிறதோ அதற்கேற்ப பொதுத்தேர்வு ( X,XII) 2021ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் உரிய விகிதத்தில் பாடஅளவு குறைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil