தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 21) நடைபெற்ற இயற்பியல் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.
இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இயற்பியல் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவர்களும் நிபுணர்களும் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
இயற்பியல் தேர்வு ஒட்டுமொத்தமாக ஆவரேஜ் அளவில் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. பெரும்பாலும் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. கட்டாயம் விடையளிக்க வேண்டிய வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. தேர்வில் கணக்கியல் சார்ந்த வினாக்கள் சற்று அதிகமாக இருந்தன என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த ஆண்டை விட இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு நடந்த வேதியியல் தேர்வை விட எளிதாக இருந்தது. எதிர்ப்பார்த்த கேள்விகள் இடம்பெற்றிருந்தன என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் நிபுணர்கள் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்தது. ஒரளவு படித்த அனைவரும் தேர்ச்சி பெறலாம். மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு 55க்கு மேல் எடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.