தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளான இன்று (மார்ச்) நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.
முதல் நாளான இன்று மொழிப்பாடம் எனப்படும் தமிழ் மொழி பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேர்வு எளிதாக இருந்தது. எதிர்ப்பார்க்கப்பட்ட கேள்விகளே இருந்தன. எதிர்பாரா கேள்விகள் எதுவும் இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முடிக்கும் வகையில் தேர்வு எளிதாக இருந்தது. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் நிறைய இடம்பெற்றிருந்தன. அரையாண்டு தேர்வை விட எளிதாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், 6 மதிப்பெண் வினாக்களில் கடிதம் கேட்டது புதிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. நெடுவினாக்கள், திருக்குறள், மனப்பாடம் பகுதி ஆகியவை எளிதாக இருந்தன. ஆனால் ஒட்டுமொத்த அளவில் எளிதாக இருந்தது என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், தேர்வு எளிதாக இருந்ததாகவும், நன்றாக படித்திருந்தால் மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக எடுக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.