தமிழகத்தில் செயல்படும் 6 அரசு மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பதற்கும், 3 தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை தொடங்குவதற்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 875 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள பாரத் மருத்துவக் கல்லூரிக்கும், இந்திரா மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் சில தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது.
150 மாணவர்களுடன், எம்.பி.பி.எஸ் படிப்பை தொடங்க, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்து.
இதுதவிர, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்திற்கு கூடுதலாக 100 இடங்கள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.
கே.கே.நகரில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 25 இடங்கள் சேர்க்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதினால், இந்த மருத்துவமனையில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலத்தில் உள்ள விநாயக மிஷன்ஷ் கிருபானந்தா வரியார் மருத்துவக் கல்லூரியில் (விநாயகா மிஷன் டீம் பல்கலைக்கழகம்) கூடுதலாக 50 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், சவீதா மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவமனை கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில், 26 அரசு உள்ளிட்ட 52 மருத்துவமனைக் கல்லூரிகள் மூலம் 8,000 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. தற்போது, வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.