Advertisment

10th, 12th Results: அரசுப் பள்ளிகள் அபாரம்; திருச்சி தேர்ச்சி நிலவரம்!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamilnadu 10th and 12th std borad exam results

Tamilnadu 10th and 12th std borad exam results; Trichy Government schools New achievement

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, திங்கள் கிழமை (ஜூன்;20) அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

Advertisment

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, 12-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் திருச்சி மாநகராட்சி 5 பள்ளிகள் மற்றும் ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 135 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் மூன்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு பள்ளியும் என மொத்தம் 455 உயர்நிலை பள்ளிகள் உள்ளன.

இந்தநிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 713 மாணவர்களும், 17 ஆயிரத்து 540 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 253 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள்.

கடந்த 2019-20, 2020-21கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையின் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது.

அதற்கு முந்தைய 2018-19 ஆம் கல்வி ஆண்டில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 96.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 87.64%, மாணவிகள் 96.78% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் திருச்சி மாவட்டத்தில் 95.93 சதவிகித மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளி 1 உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதி திராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒன்றும், பார்வையற்றோருக்கான பள்ளி ஒன்றும் என 259 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

இவற்றில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் திருச்சி மாவட்டத்தில் 15,522 மாணவர்களும், 17,599 மாணவிகளும் என 33 ஆயிரத்து 121 மாணவர்கள் பொதுத்தேர்வை சந்தித்தனர்.

இதில் 95.93 சதவிகிதத்தினர் தேர்வாகிய நிலையில் மாணவர்கள் 93.31 சதவிகிதமும், மாணவியர் 98.24 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 திருச்சியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை சந்தித்த மாணவ மாணவியர்களில், மாணவியர்களே பெரும்பான்மையான தேர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு பள்ளி ஆசிரிய பெருமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 90.05 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment