Tamilnadu School Education Update : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சுமார் ஒரு வருடத்தற்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது பள்ளி கல்லூரிகள் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. 9 முதல் 12 –ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த தேர்தலுக்காக ஒருபுறம் அரசியல் கட்சிகளும், மறுபுறம் தேர்தல் ஆணையமும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் வாக்குப்பதிவு பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் என்பதால், வாக்குப்பதிவுக்காக பள்ளிகளை தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"