New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-nadu-schools-1604658347.jpg)
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒரு மதிப்பெண் பிரிவில் இந்தக் கேள்விக்கு விடையளித்து இருந்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும் – தேர்வுத்துறை அறிவிப்பு
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்புக்கு கடந்த மாதம் (மார்ச்) 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது.
இதில் 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 21-ம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று முதல் 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த திருத்துதல் பணிகளில் சுமார் 95 ஆயிரம் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து இரு வகுப்புகளுக்கும் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19 ஆம் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு கேள்விக்கு விடையளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 4 ஆவது கேள்விக்கு பதிலளித்த (கேள்வியை அட்டெண்ட் செய்த) அனைவருக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாக்களில் 4 ஆவது கேள்வியாக ஜோதிபா பூலே குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. கூற்று – காரணம் வகையிலான இந்த கேள்வியில்,
கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பங்களையும் திறந்தார்.
காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
என்று குறிப்பிட்டு, விடைகளாக கீழ்கண்டவை கொடுக்கப்பட்டு இருந்தது.
அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
ஆனால் இந்த கேள்விக்கான கூற்று மற்றும் காரணம் இரண்டும் முரணானதாக இருப்பதாக கூறி, கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில், இந்த கேள்விக்கு எந்த விடையளித்திருந்தாலும், அதாவது கேள்விக்கு ஏதேனும் ஒரு பதிலை அளித்திருந்தாலும், அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணான ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கேள்வி தவறாக கேட்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் குழம்பி தவறான பதில் அளித்திருக்கலாம், எனவே மதிப்பெண் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு தக்கவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.