/indian-express-tamil/media/media_files/n4XoidwCii4RwXLxzaQ5.jpg)
தமிழக அரசுப் பள்ளிகளில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த மதிப்பீடு பணிகள் இன்று (டிசம்பர் 2) முதல் தொடங்கி நடைபெற உள்ளன.
தமிழ்நாட்டின் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, கொரானா காலத்திற்கு பின்பு மாணவர்களின் கற்றல் இடைவெளியைச் சரிசெய்யும் நோக்கத்துடனும், அனைத்துக் குழந்தைகளும் பொருள் புரிந்து படிக்கவும் எண்மதிப்பு அறிந்து அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற இலக்க்குடனும் தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பொருள் புரிந்து படிக்கவும் எண்மதிப்பு அறிந்து அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இதன் இலக்காகும். இந்நிலையில், எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீடு பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.இ.ஆர்.டி.இ) சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்புகளில் கற்பித்தல், கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
நடைமுறையில் உள்ள இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலை மதிப்பீடு (மிட்லைன் அசெஸ்மென்ட்) மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 135 பள்ளிகள் (சென்னை 136 பள்ளிகள், நீலகிரி 100 பள்ளிகள் தவிர) வீதம் மொத்தம் 5,096 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. இதுதவிர, மாவட்டத்துக்கு தலா 1,620 மாணவர்கள் என மொத்தம் 61,560 பேரிடம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
இந்த மதிப்பீடு பணிக்காக மாவட்டத்துக்கு தலா 144 கணக்கெடுப்பாளர்கள் வீதம் 5,472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு முதுநிலை ஆசிரியருடன் சேர்ந்து இந்த மதிப்பீடு பணியை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி டிசம்பர் 13-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.