10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தலா 8 லட்சம் மாணவ, மாணவிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அதுபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்: TANCET 2023: தேர்வு தேதி வெளியீடு; பிப்.2 முதல் விண்ணப்பிக்கலாம்!
அதேநேரம், இந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி முதல் 10 தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், ஏற்கனவே மார்ச் 7 முதல் 10 வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், பிளஸ் 1 தேர்வு முடிவு மே19 ஆம் தேதியும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதியும் வெளியிடப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil