Advertisment

TNEA Counselling 2024: சாய்ஸ் ஃபில்லிங் முதல் கட்டணம் செலுத்துவது வரை 4 ஸ்டேஜ்; அமைச்சர் பொன்முடி முக்கிய அப்டேட்

பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி

author-image
WebDesk
New Update
Ponmudi

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 22 ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Advertisment

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். 

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 22 ஆம் தேதி தொடங்கும். முதலில் ஜூலை 22 முதல் 24 ஆம் தேதி வரை 3 நாட்கள் விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன்பின் 25 ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 11 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். 

கலந்தாய்வு 3 சுற்றுகளாக மாணவர்களின் தரவரிசைக்கு ஏற்ப நடைபெறும். ஒவ்வொருச் சுற்றிலும் நான்கு நிலைகள் இருக்கும். கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் சாய்ஸ் ஃபில்லிங், சீட் ஒதுக்கீடு, ஒதுக்கீட்டை உறுதி செய்தல், கல்லூரிக்குச் சென்று கட்டணம் செலுத்தி சீட் ஒதுக்கீட்டை ஏற்றல் என நான்கு நிலைகள் உள்ளன.

7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான தற்காலிக ஒதுக்கீடு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி நடைபெறும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் படிக்க அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளது. நடப்பாண்டு 2,53,952 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிவடைந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதைப் போல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருந்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இந்த வருடம் அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல், பாலிடெக்னிக் என எதுவாக இருந்தாலும் உயர்கல்வியில் அதிகமான தமிழக மாணவர்கள் சேர்ந்து படிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ponmudi Tn Engineering Admissions Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment