அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1500 வரை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் நேற்று (அக்.4) உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய அதிகாரிகளுக்கு ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிலையில் நேற்று மாநாட்டில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் பள்ளி விடுதி மாணவர்களுக்கு தலா ரூ.1000, கல்லுாரி விடுதி மாணவர்களுக்கு தலா ரூ.1100 வீதம் உணவு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த உதவித் தொகையை பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1400 ஆகவும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.1100-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியை வைத்து தான், விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“