அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியீட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து, 2025 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரைப் பட்டியல் கேட்டுப் பெறப்பட்டது.
அவை பரிசீலிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு தகுதியான 360 பேர் கொண்ட உத்தேசப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 2005-06 ஆம் கல்வியாண்டில் முதுநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், பதவி உயர்வு மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 2015-16 ஆம் கலவியாண்டில் பணி வரன்முறை செய்யப்பட்டவர்கள், தலைமை ஆசிரியராக பதவி உயர்வை தற்காலிக உரிமையிடல் செய்தவர்கள் ஆகியோரை சேர்த்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்து அதில் ஏதேனும் திருத்தம், நீக்கம் இருப்பின் அதன் விவரங்களை வரும் 13 ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.