/tamil-ie/media/media_files/uploads/2023/07/DPI.jpg)
பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது. அதாவது, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக பதிவு செய்து அரசு தரும் நலத்திட்ட உதவிகளை முறைகேடாக பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று பள்ளிக்கல்வித் துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முறைகேடுகளை களையும் நோக்கத்திலும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ். தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த அதிகாரிகள், அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் ஆய்வு மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வர். மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வுசெய்து, அறிக்கையை ஒவ்வொரு 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.