TNPSC Exam Update : தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் குருப் 2 ஏ ஆகிய தேர்வுகளுக்காக அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பணி கிடைக்கும் என்ற நிலையில், தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பல லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுக்கு தயாராகி வருகினறனர்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த பலரும் ஏமாற்றம் அடைந்த நிலையில், 2022-ம் ஆண்டு முதல் தேர்வுகள் முறைப்படி நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கடந்த வருட இறுதியில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் கடந்த தேர்வை போல் இல்லாமல் இனி வரும் தேர்வுகளில் கட்டாயம் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் குருப் 2 ஏ தேர்வுகளுக்காக அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும், அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்காக அறிவிப்பு இம்மாதம் வெளியாகும். அறிவிப்பு வெளியான அடுத்த 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும் குரூப் 4 தேர்வு குறித்து மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று கூறிய அவர், இனி வரும் காலங்களில் தேர்வு நடத்தும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும்கூறியுள்ள அவர், அரசின் உத்தரவின்படி அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் கட்டாய மொழி தேர்வாக நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “