/indian-express-tamil/media/media_files/2025/07/12/bab-2025-07-12-22-25-26.jpg)
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை 50-ஆயிரம் பேர் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது,தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெற்றது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வு எழுத மாநிலம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 50,144 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக 100 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்க 175 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தவிர அரை கண்காணிப்பாளர் உள்பட 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னதாக வந்து விட வேண்டும், தேர்வர்கள் காலை 8:30 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணி வரை நடக்கும், தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில், 7 மாத குழந்தையுடன் வந்த ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த லீஜா என்ற இளம்பெண் குழந்தையை தனது பெற்றோரிடம் ஒப்படைத்த பிறகு தேர்வு எழுத சென்றார். அவரது செயல் பலரின் பாராட்டைப் பெற்றது. அதேபோல நரசிபுரத்தில் 25 நாட்களேயான கைக் குழந்தையுடன் தேர்வு மையத்திற்கு 9.05 மணிக்கு வந்த காமினி என்ற பெண், நேரத்தைவிட்டு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.
தேர்வு எழுத முடியாமல் கதறி அழுத அந்த பெண், குழந்தையுடன் திருப்பி அனுப்பப்பட்டார். அதேபோல மற்றொரு பெண் 9.05 மணிக்கு வந்ததால் திருப்பி அனுப்பப்பட்டார். பல நாட்களாக இந்த தேர்வுகளுக்காக, மிகவும் கஷ்டப்பட்டு படித்து கடைசி நேரத்தில் தேர்வை தவறவிட்டதால், பெண்கள் கண்ணீர் விட்டு திரும்பி சென்றது பார்ப்போரை கவலையடைய செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.