தஞ்சாவூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் முரசொலி. இவர் கடந்த வாரம் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பதக்கம் வழங்கி பாராட்டி வாழ்த்தினார். அப்போது படிப்பிற்கு உதவிகள் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் செய்து தருகிறேன் என்று உற்சாகப்படுத்தினார். மேலும் மாணவர்களுக்கு 6 அடி உயரத்தில் தென்னங்கன்று வழங்கி தென்னங்கன்று போல் வாழ்க்கையில் உயர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து எம்.பி முரசொலி, தன் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரத்தை பெற்றார். பின்னர் சர்ப்ரைஸாக நெய்வாசல் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/gH1QGx15830Y3qScJpfv.jpeg)
முரசொலியின் திடீர் வருகையால் ஆசிரியர்கள் பரபரப்படைந்தனர். அப்போது, ``உலகில் சிறந்த மனிதாக வாழ்வதற்கு கல்வி அவசியம். அத்தகைய கல்வியை வழங்கும் ஆசிரியர்களான நீங்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள். மேலும், ஒரு மாணவர் கூட தோல்வி கிடையாது வகையில் அனைத்து மாணவர்களையும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைத்துள்ளீர்கள்.
உங்களது அர்பணிப்பு மிக்க இந்த செயலை நேரில் பாராட்டடுவதற்காக வந்திருக்கிறேன்” என்றவர் ஆசிரியர்களுக்கு சால்வை, பதக்கம் அணிவித்து மலர்கொத்து வழங்கி மரியாதை செய்து பாராட்டினார். முரசொலியின் இந்த செயலால் ஆசிரியர்கள் நெகிழ்ந்தனர். இதே போல் பனையக்கோட்டை பொன்னாப்பூர், திருமங்கலக்கோட்டை கீழையூர், கருக்காடிப்பட்டி ஆகிய பள்ளிகளுக்கும் சென்று பாராட்டினார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/05/v2ZHrHsZpijsAhgRgT1y.jpeg)
இது குறித்து முரசொலி எம்.பி தெரிவித்ததாவது; `10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த நூறு மாணவர்களை எனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினேன். பத்தாம் வகுப்பில் 73 பள்ளிகள், 12ம் வகுப்பில் 14 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து கல்வி தந்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய ஆசிரியர்களை பாராட்டி, வாழ்த்தி மரியாதை செய்கின்ற விதமாக அந்த பள்ளிகளுக்கு சென்றேன்.
இப்படியான முன்னெடுப்பால், வரும் கல்வி ஆண்டில் நூறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 12ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு சென்றது போல், 10ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்ட இருக்கிறேன்" என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்