கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி இயக்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் விடுத்துள்ள கோரிக்கையில், “தமிழகம் முழுவதும் உள்ள 43 மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ்மொழி கண்டிப்பாக கற்றுக் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இந்த வருடமே செயல்பத்தப்பட்டு உள்ளது.
மேலும், ஜவஹர் நவோதயா பள்ளிகள் மத்திய அரசால் 1986-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் சுமார் 600 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
ஜவஹர் நவோதயா பள்ளிகள் அனைத்தும் இருபாலருக்குமான உண்டு, உறைவிட பள்ளிகளாகும். இங்கு மாணவிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது.
பொதுவாக நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி பயில பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் கிராமங்களில் வசிக்கும் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
அப்படிப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம்தான் இந்த ஜவஹர் நவோதயா பள்ளிகள்.
மேலும், ஜவஹர் நவோதயா பள்ளிகளில் உயர் தரம் வாய்ந்த கல்வி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 37 ஆண்டுகளாக இங்கு பயின்ற மாணவர்கள் தேசிய அளவில் 98 சதவீதம் தேர்ச்சியடைந்து வருகின்றனர்.
போட்டித்தேர்வுகளிலும் கணிசமான இடத்தை நவோதயா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இதுநாள் வரை திறக்கப்படாததால், தரமான இலவச கல்வி கிராமப்புற ஏழை, பட்டியல், பழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் 19,600 மாணவர்கள் இலவச கல்வி பெறவும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்திருப்பதை உடன் வாபஸ் பெறவும் வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“