தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி வழங்கும் பயிற்சியைப் பயன்படுத்தி நீங்களும் உற்பத்தியைத் தொடங்கலாம். இதுகுறித்த முழு விபரத்தை இப்போது பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்" குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி வருகிற நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்" பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 13.11.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கபட உள்ளது.
இந்த பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் நவம்பர் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ”உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி - 628 008" என்ற முகவரியில் அல்லது தொலைபேசி 8072208079 மூலமாக தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“