New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/04/CFmPBBBvJzBivPgOQLCM.jpg)
ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் நீட் தேர்வு எழுத மறுப்பு.. உடனே புதிய ஆடை வாங்கிக் கொடுத்த பெண் போலீஸ்!
ஆடையில் அதிக பட்டன்கள் இருப்பதாகக் கூறி, மாணவியை நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்த போது, உடனடியாக அவருக்கு உதவிய பெண் போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் நீட் தேர்வு எழுத மறுப்பு.. உடனே புதிய ஆடை வாங்கிக் கொடுத்த பெண் போலீஸ்!
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது. இம்முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுதினர், சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பெருமாநல்லூர், என 7 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 3ஆயிரத்து 212 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வினை எழுதினர். காலை 11 மணிக்கு மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகளை, சோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதித்து வந்தனர். அப்போது, தேர்வெழுத வந்த மாணவி ஒருவரின் ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படங்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தேர்வு அறைக்கு செல்ல முயன்றபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் அணிந்திருந்த சுடிதார் உடையில் அதிக அளவில் பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனால், கலக்கமடைந்த மாணவி செய்வதறியாது தவித்துள்ளார். தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். அப்போது தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் உடனடியாக மாணவியை இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் சென்று புதிய உடை வாங்கிக் கொடுத்தனர்.
அந்த உடையை அணிந்து கொண்டு மாணவி மீண்டும் தேர்வு மையத்திற்கு வந்தார். பின்னர் சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அந்த மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி செய்த பெண் போலீசாரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதேபோல், சென்னையில் நீட் எழுதவந்த மாணவர் ஒருவர் முழுக்கை டீசர்ட்டுடன் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் அறிவுறுத்தலுக்கு பின் அவரின் அப்பா அணித்திருந்த அரைக்கை டீசர்ட்டை மாற்றிக் கொண்ட பின் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.