சென்னை: இன்று (மே 8) காலை 9 மணியளவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை மொத்தம் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, மொத்த தேர்ச்சி சதவீதம் 95.03 ஆக உள்ளது. இதில், மாணவிகள் 96.70% தேர்ச்சி பெற்று மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.16% ஆகும்.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:
அரசுப் பள்ளிகள்: 91.94%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள்: 95.71%
தனியார் பள்ளிகள்: 98.88%
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி பெற்ற முதல் ஐந்து மாவட்டங்கள்:
அரியலூர்: 98.82%
ஈரோடு: 97.98%
திருப்பூர்: 97.53%
கோவை: 97.48%
கன்னியாகுமரி: 97.01%
பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:
தமிழ்: 135 பேர்
இயற்பியல்: 1,125 பேர்
வேதியியல்: 3,181 பேர்
கணிதம்: 3,022 பேர்
விலங்கியல்: 36 பேர்
உயிரியல்: 827 பேர்
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். பின்வரும் இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி முடிவுகளை சரிபார்க்கலாம்:
https://results.digilocker.gov.in
www.tnresults.nic.in
மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.