TN governor RN Ravi calls students to participate state level essay competition: நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிறைவையொட்டி, மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்குகொள்ள தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக ஆளுனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் மீது மோகம்: முதல் முறையாக 2 லட்சத்தை தொட்ட பொறியியல் விண்ணப்பங்கள்
இது தொடர்பாக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, தமிழகத்தில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை போட்டியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த கவர்னர் ஆர்.என்.ரவி விருப்பம் தெரிவித்துள்ளார். (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான) மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களும் கட்டுரைகளில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டி நடத்தப்படும்.
பள்ளி மாணவ, மாணவிகள், 'நான் விரும்பும் சுதந்திரப்போராட்ட வீரர்' என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுத வேண்டும். இந்தக் கட்டுரை 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் அமைய வேண்டும்.
கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் '2047-ல் இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரைகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
கட்டுரைகளை அனுப்பும்போது, பெயர், வீட்டு முகவரி, வகுப்பு அல்லது பாடப்பிரிவு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். படிக்கும் கல்வி நிறுவனத்தின் முகவரி, செல்போன் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
இந்த கட்டுரைகளை மதிப்பிடும் நடுவர்களாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறவனத்தின் இயக்குனர் ஆர்.சந்திரசேகரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் இருப்பர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 வெற்றியாளர்களை நடுவர் குழுவினர் தேர்வு செய்வர். கல்லூரி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள்
தமிழ் கட்டுரைகள்: இயக்குனர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை-100
ஆங்கில கட்டுரைகள்: துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், 69, அண்ணாசாலை, கிண்டி, சென்னை-32
இவ்வாறு, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil