தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் செயல்படுவது குறித்தும், 2021 வாரியத் தேர்வு அட்டவணை குறித்தும் மாணவர்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தைத் தவிர்க்க பள்ளி கல்வித் துறை உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், மதுரை வேண்டுகோள் விடுத்தது.
முன்னதாக, தமிழகத்தில் பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), மற்றும் பள்ளி விடுதிகளையும், நவம்பர் 16ம் தேதி முதல் முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட தமிழக அரசு அனுமதியளித்தது.
ஆனால், பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால், நவம்பர் 9ம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டது.
இதன் அடிப்படையில், 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும், பள்ளி விடுதிகள் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு நவம்பர் 12ம் தேதி அறிவித்தது.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்த விரும்பினால் ஆட்சேபனை இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பள்ளிகள் மீண்டும் செயல்படுவது குறித்தும், 2021 வாரியத் தேர்வு அட்டவணை குறித்தும் பள்ளிக்கல்வித் துறை தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு பாடச்சுமையைக் குறைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், அதுகுறித்த விவரங்களை விரைவாக அறிவிப்பதன் மூலம் மாணவர்களிடையே உள்ள குழப்பத்தை நீக்க முடியும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, பள்ளிகளில் கிருமி நாசினி தெளிப்பது, தொழில்நுட்ப தீர்வுகளை மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவேண்டும்" என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை வரவேற்பதாகவும், உள் ஒதுக்கீடை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பாடத்திட்டங்கள் குறைப்பு:
கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தை முன்னிட்டு, பல மாதங்களாக வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை இரண்டாகப் பிரிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது
இதன்படி, மாணவர்குக்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டிய பகுதிகள் முன்னிரிமை பாடங்கள் எனவும், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்ளும் பகுதிகள் விருப்ப பாடங்களாகவும் பிரிக்கப்பட உள்ளது .
நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே, நீட் போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படுகின்றன என்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.