இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 7) வெளியிடப்பட்டது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறையும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.50 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்தக் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் வீரராக ராவ் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியது. www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக மாணவர்கள் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு சேவை மையங்கள் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அசல் சான்றிழ்களை பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 12 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
மாணவர்களின் சமவாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும். இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
அதில் தவறு இருந்தால் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் ஜூலை 11 முதல் 20 ஆம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் சரிசெய்யப்படும்.
பின்னர், கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (AICTE) கல்வி ஆண்டு அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.
இதற்கிடையே, விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை மாணவர்கள் தேர்வு செய்துவிட வேண்டும். ஏனெனில், ஆவணங்களை இணையவழியில் சரிபார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர் சேவை மையத்துக்கு நேரடியாக வந்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும். எனவே, விண்ணப்பப் பதிவின்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் மட்டும் நேரடியாக நடைபெறும்.
இதுகுறித்து சந்தேகம் இருப்பின் 1800-425-0110 எனும் தொலைபேசி எண் அல்லது tneacare@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் பொறியியல் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே (மாலை 6 மணி நிலவரப்படி) 20,097 மாணவர்கள் விண்ணப்ப பதிவு பதிவு செய்தனர். அதில் 5,812 பேர் கட்டணமும் செலுத்தியுள்ளனர் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“