Advertisment

பொறியியல் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 2% ஒதுக்கீடு – பொன்முடி உறுதி

பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 இடங்களை அடுத்தாண்டு முதல் 2 சதவீதமாக அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் – உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

author-image
WebDesk
New Update
எரட

விளையாட்டு வீரர்களுக்கு பொறியியல் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல் 2 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

Advertisment

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இந்தக் கலந்தாய்வு மூலம் நடைபெறும். 

இந்தநிலையில், முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் இக்கலந்தாய்வை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி கூறியதாவது: “மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல்கட்டமாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் சிறப்பு பிரிவினரில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 111 இடங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 38 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில் 11 இடங்களும் உள்ளன. 

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி முடிந்ததும் ஜூலை 29-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட பொறியியல் கலந்தாய்வு அட்டவணையின்படி, தொடர்ந்து, துணை கலந்தாய்வு, எஸ்.சி அருந்ததியர் பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் எஸ்.சி மாணவர்களை கொண்டு நிரப்புவதற்கான கலந்தாய்வு என அடுத்தடுத்து கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு செப்டம்பர் 11-ம் தேதி கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும். கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை நிரப்ப சிறப்பு தளர்வு அளிக்கப்படும். 

தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கான இரண்டு சதவீத இடங்களில் 3,596 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 8 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 3 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முதலில் குறைவாக இருந்தது. தற்போது தமிழக அரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் பூஜ்ஜிய தேர்வு சதவிகிதம் கொண்ட கல்லூரிகள் தொடர்ந்து அப்படிச் செயல்படுவதாக புகார் வருமானால் அதைப்பற்றி ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்படும். ஆன்லைனில் கலந்தாய்வு இல்லாமல் ஒற்றைச் சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது குறித்து வரும் ஆண்டில் பரிசீலிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள் இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு முதலமைச்சரிடம் பேசி, பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 இடங்களை அடுத்தாண்டு முதல் 2 சதவீதமாக அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும். 

நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் 433 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 1,77,342 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை இடங்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது உறுதி. அதேநேரத்தில் விருப்பமான கல்லூரி கிடைக்குமா? பிடித்தமான பாடப்பிரிவு கிடைக்குமா? என்பதுதான் சவாலாக இருக்கும்.

பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இணையதளங்களில் வெளியிடுவது போல் தன்னாட்சி பெற்ற கல்லூரி முடிவுகளையும் அடுத்த ஆண்டு முதல் இணையதளங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.

அரசு பள்ளியில் படித்து பொறியியல் படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் ரூ.1000 உதவித்தொகை பெறுவார்கள்.

சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள். துணைவேந்தர்களை நியமிப்பதற்கென பல்கலைக்கழக விதிமுறைகள் உள்ளன. செனட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழு அமைக்கப்பட்டு அக்குழு பரிந்துரை செய்யும் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவார். இதுதான் நடைமுறை. ஆனால், புதிதாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, துணைவேந்தர்களை விரைவில் நியமிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ponmudi Tn Engineering Admissions Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment