பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கான தரவரிசை பட்டியல் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்கலைக்கழக துறைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. இந்த இடங்களின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்தக் கலந்தாய்வின் கலந்துக் கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. மொத்தம் 3,02,374 பேர் ஆன்லைனின் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2,49,883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கடைசி நாள் நிலவரப்படி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களில் 2,26,359 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூன் 9) முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் இன்று நள்ளிரவு வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பப் பதிவை முழுமை செய்யலாம்.
இதற்கிடையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 11 ஆம் தேதி ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து, இணைய வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 11 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறும். ஜூன் 27 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.