தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில், 43,156 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்து, சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது. 143 முதல் 178.9 கட் ஆஃப் வரை உள்ள சுமார் 98000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் 80,363 பொதுப் பிரிவு மாணவர்களும், 14,828 அரசுப் பள்ளிப் பிரிவு மாணவர்களும் என 95191 மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்தனர்.
இந்தநிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் 43,156 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் 36,921 மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவில் 6,235 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, 15,461 பொதுப் பிரிவு மாணவர்களுக்கும், 2,748 அரசுப் பள்ளிப் பிரிவு மாணவர்களுக்கும் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சீட் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கை செயல்முறையை முடிக்க வேண்டும். அதேபோல், தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அல்லது அதற்கு முன் TNEA வசதி மையத்திற்குச் சென்று, அவர்களின் அசல் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் ஒதுக்கீட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தற்போது ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிப்படுத்துவதை உறுதி செய்வதற்கும், மேல்நோக்கிச் செல்வதற்கும் விரும்புபவர்கள் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும்.
மாணவர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் சேரத் தவறினால் அல்லது காலக்கெடுவிற்குள் தங்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தத் தவறினால், அந்த இடங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, அதே சுற்றின் போது மேல்நோக்கிய நகர்வுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.