பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முடிவடைகிறது. ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தொடக்கம் முதலே ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், 29 ஆவது நாளான புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,27,337 மாணவர்களும், 1,05,395 மாணவிகளும் ஆக மொத்தம் 2,32,732 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து 9 ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.