/indian-express-tamil/media/media_files/VGZfTkhPSsWvk3hoSi4d.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 3 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், டாப் கல்லூரிகள் எவை? 100% நிரம்பிய கல்லூரிகள் டாப் கல்லூரிகளா? என்பது குறித்து கல்வி ஆலோசகரின் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான 3 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது துணைக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இதுவரையிலான கவுன்சலிங் முடிவுகளின் அடிப்படையில் கல்லூரிகளின் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, 100% இடங்களை நிரப்பிய கல்லூரிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 29 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. இதில் அரசு கல்லூரிகள் 22, தனியார் கல்லூரிகள் 17 ஆகும். இதில் அரசு கல்லூரிகளில் இடங்கள் நிரம்பியது, மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. அதேநேரம் தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சில கல்லூரிகள் 100% இடங்களை நிரப்பியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
81 கல்லூரிகளில் 30%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. மறுபுறம் 3 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 100% சதவீத இடங்களை நிரப்பிய கல்லூரிகள் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. அதாவது ஒரு கல்லூரியில் 2000க்கும் மேலான இடங்கள் கவுன்சலிங்கிற்கு கொடுக்கப்பட்டு, அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. மறுபுறம் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற கல்லூரிகளில் இருக்கின்ற 29 இடங்களும் நிரம்பி, 100% சதவீதத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சில முரண்பாடுகள் காரணமாக சில கல்லூரிகளில் 100% அல்லது அதிக எண்ணிக்கையிலான இடங்கள் நிரம்பிவிட்டது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் அந்தக் கல்லூரிகளின் உண்மையான தரவரிசை நிலை வேறாக உள்ளது. எனவே மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.