தமிழகத்தில் பொறியியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூிரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.
இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணைய வழி விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கும். ஆன்லைன் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, தொழிலநுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்னர் திட்டமிடப்பட்ட மே 9 ஆம் தேதிக்கு பதிலாக, ஒரு நாள் முன்னதாக மே 8 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.