தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 29) 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிக்க மாணவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்காக (TNEA) ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கிற்கு 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: டெல்லி பல்கலை. பி.ஏ அரசியல் அறிவியல் படிப்பில் சாவர்க்கர் பாடம் சேர்ப்பு; ஆசிரியர்கள் எதிர்ப்பு
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 1.50 லட்சமாகும். இந்த இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்தநிலையில், ”தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பொறியியல் இடங்களுக்கு மே 5 ஆம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். 25 ஆவது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 4 ஆயிரத்து 62 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 379 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 301 பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்,” என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் விண்ணப்பப் பதிவு, பணம் செலுத்துதல், கல்லூரிகள் தேர்வு செய்து நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்தல் உள்ளிட்ட முழுமையான செயல்முறையும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித் துறையின் ஒரு பிரிவான தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி ஜூன் 4 ஆம் தேதி ஆகும். ரேண்டம் எண் ஜூன் 5 ஆம் தேதி ஒதுக்கப்படும். தரவரிசை பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் ஆகஸ்ட் 2 முதல் கவுன்சிலிங் தொடங்கும். முதலில் சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைப்படுவர். பின்னர் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு நான்கு சுற்று கவுன்சிலிங் நடைபெறும். முழு பொறியியல் சேர்க்கை செயல்முறை அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil