டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதாக தேர்வர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. தற்போது காலியிடங்கள் 10,117 ஆக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Cut Off: குரூப் 4 ரிசல்ட் வெளியானது; இட ஒதுக்கீடு, உத்தேச கட் ஆஃப் லேட்டஸ்ட் நிலவரம்
இதனிடையே, 8 மாதங்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு இருந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் 24 அன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்வர்களின் தமிழ் மொழித் தகுதித் தாளில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன. மேலும், தேர்வர்களின் ஒட்டுமொத்த தரவரிசை (Overall Rank), சாதி வாரியான இடஒதுக்கீட்டு தரவரிசை (Communal Rank) ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் சில குளறுபடிகள் உள்ளதாக தேர்வர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஒட்டுமொத்தமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வரின் ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் சாதி வாரியான தரவரிசை இரண்டும் குறைந்த மதிப்பெண் பெற்றவரை காட்டிலும் குறைவாக வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர் தரவரிசையில் முன்னிலை பெற முடியும். ஆனால் அதிக மதிப்பெண் பெற்றவரை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் தரவரிசை ஒட்டுமொத்தமாகவும், சாதி ரீதியிலாகவும் குறைவாக உள்ளது.
இதனால் அதிக மதிப்பெண் பெற்றவர் தரவரிசையில் பின்னணியிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர் தரவரிசையில் முன்னணி இடம் பிடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே இது நிகழ்ந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் தேர்வர்களின் பதிவெண்ணுடன் கூடிய தரவரிசை பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. கடந்த 2019-ல் குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பதிவெண் உடன் கூடிய தரவரிசை பட்டியலை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. இது தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடியவர்கள் தெரிவிக்கின்றனர். 8 மாதங்கள் கழித்து வெளியிடப்பட்டு இருக்கும் தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகள் தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil