டிசம்பர் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மறுதேர்வு பிப்ரவரி 22 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் டி.என்.பி.எ.ஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;
"குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தெரிவிற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகலில் 15 மாவட்ட மையங்களில் 4,186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.
சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுத்தேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது.
தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது. மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுத்தேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மறுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்.” இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“