TNPSC Chairman assures Group 4 exam schedule released by this month: குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதியாக கூறியுள்ளார்.
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் தமிழக தேர்வர்கள் பெரிதும் எதிர்நோக்கும் தேர்வுகள் இரண்டு தான். அவை குரூப் 4 மற்றும் குரூப் 2.
கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்தப்படாததால், தேர்வு எப்போது நடக்கும் என தேர்வர்கள் ஆர்வத்துடன் காத்திருத்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 தேர்வு அறிவிப்பும், மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு அறிவிப்பும் வெளியிடப்படும் என்று முன்னர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிப்ரவரி மாதத்தில் குரூப் 2, தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. தற்போது அந்த தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருவதோடு, மே 21இல் நடக்கும் முதல்நிலை தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், “ஓ.எம்.ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை முழுவதுமாக களைய TNPSC பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. TNPSC தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலையே பிரித்து எடுக்கப்படுவதால் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கான விடைத்தாள் கொண்டுவரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் TNPSC அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் TNPSC தேர்வுகளை அச்சமின்றி எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் யாருடையது என்பதை கணினி மூலம் மட்டுமே கண்டறியப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விடைத்தாள் திருத்தத்தில் இருந்த தில்லுமுல்லுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: TNPSC Jobs: தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
குருப் 4 தேர்வுகள் முன்பே திட்டமிட்டபடி, மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத மத்தியில் அதற்கான அட்டவணை வெளியாகும், குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் (Syllabus) தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவுறும். பிற அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. காலிப்பணியிடம் தற்போது 5 ஆயிரம் என கணக்கிடபட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தேர்வு தேதி அறிவித்து கலந்தாய்வு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எந்த பாடத்திட்டத்தை படித்தால் தேர்வு எழுத முடியும் என்ற விபரத்தையும் TNPSC வெளியிடப்பட்டுள்ளது. TNPSC தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு நம்பிக்கை எழுந்துள்ளது.
நிரந்தர பதிவுடன் -ஆதார் அட்டை இணைப்பு கால அவகாசம் நிறைவு பெற்றுவிட்டது. அந்த கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா பெயரில் வெளியாகியுள்ள ஆணையில் நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் இணைப்பு கால அவகாசம் அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil