டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2 உள்ளிட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.
அதற்காக டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளுக்கான தேதி அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களுடன் மாத அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு வருகிறது.
அதன்படி தற்போது 18 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1, 2 உள்ளிட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது தவிர குரூப் 3 உள்ளிட்ட 11 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அட்டவணையையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற இணைப்பைச் சரிபார்த்து, டி.என்.பி.எஸ்.சி முழுமையான அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து அவர்களில் 55,071 பேர் மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வின் முடிவுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைகள் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 217 பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 825 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் ஆதரவு சேவைகளுக்கான தேர்வு மே மாதம் நடைபெற்றது. 1083 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”