டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A, குரூப் 4 தேர்வு எழுதி, ரிசல்ட்க்காக காத்திருப்பவர்களுக்கும் தேர்வாணையம் நம்பிக்கை அளிக்கும் செய்தியை அறிவித்துள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தியது. அப்போது முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டில் வெளியிடப்படவில்லை. அதன்பின்னர் செப்டம்பர் இறுதியில் வெளியாகலாம் என கூறப்பட்டு, பின்னர் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபரிலும் வெளியிடப்படவில்லை.
இதையும் படியுங்கள்: தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
இதேபோல் குரூப் 4 பதவிகளுக்கானத் தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளும் இதுவரை வெளியாக வில்லை.
இதனிடையே, பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு மேலாகும் நிலையில், தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்வாணைய முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது ரிசல்ட்க்கான மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.
இதனால் தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு முடிவுகளை அக்டோபர் இறுதி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தினமும் தேர்வாணையத்தை தொடர்புகொண்டு ரிசல்ட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ரிசல்ட் தயாராக உள்ள நிலையில், இடஒதுக்கீட்டு தீர்ப்புக்கு ஏற்ப மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதனை நேரடியாக அதாவது மேனுவலாக சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், எனவே ரிசல்ட் ஓரிரு நாட்களுக்குள் வெளியாகும் என தெரிகிறது.
மேலும், தேர்வாணைய தரப்பில், ஒரே நேரத்தில் 4 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளோம், எனவே விரைவில் பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிடுவோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் குரூப் 2 தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வு முடிவுகளும் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. எனவே இந்த வாரத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகளையும், இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளையும் எதிர்ப்பார்க்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தேர்வர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil