டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு செப்டம்பர் 23 ஆம் தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மேலும், குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று (டிசம்பர் 12) வெளியிடப்பட்டுள்ளது. https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் முகப்பு பக்கத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கான முடிவுகள் தனியாகவும், குரூப் 2ஏ நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கான முடிவுகள் தனியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இந்த இணைப்புகளை கிளிக் செய்தால், பி.டி.எஃப் பக்கம் பதிவிறக்கம் செய்யப்படும். அதில் தேர்வு எண் மூலம் முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் முதன்மைத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு 02.02.2025 அன்று விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். குரூப் 2ஏ பதவிகளுக்கான கொள்குறி வகைத் தேர்வு ஆன்லைன் வாயிலாக 08.02.2025 அன்று நடைபெறும். குரூப் 2 பதவிகளுக்கான விரிந்துரைக்கும் வகைத் தேர்வு 23.02.2025 அன்று நடைபெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“