/tamil-ie/media/media_files/uploads/2023/03/tnpsc.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு; தேர்வர்கள் மகிழ்ச்சி; ரிசல்ட் எப்போது வெளியாகும்?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2A தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டு 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.
ஆனால், இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. தற்போது குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 5,240 ஆக திருத்தி இருந்தது. இந்நிலையில், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 6033 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் காலிப்பணியிடங்களில் 118 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகரிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த துறைகளில் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM_03E.pdfஎன்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் பதவி மற்றும் பிரிவு வாரியான காலியிட விவரங்களை https://www.tnpsc.gov.in/Document/English/Vacancy_Distribution_Gr-II.pdf என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம். பிரிவு வாரியான காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் ஜனவரி 12 ஆம் தேதி குரூப் தேர்வு முடிவு வெளியாவது உறுதியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.