TNPSC Group 2 Exam 2024: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களுக்கு இடையே வினாத்தாளின் கடினத்தன்மையில் வேறுபாடு இருப்பதால், நார்மலைஷேசன் செய்ய வேண்டும் என தேர்வர்களும் நிபுணர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை நேற்று (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது வருகை சதவிகிதம் 73.22% ஆக உள்ளது.
இந்தக் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. இரண்டாம் பகுதி மொழிப் பாடப்பகுதி. இதில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றன.
இந்தநிலையில், குரூப் 2 தேர்வில் தமிழ் மொழிப்பாடம், ஆங்கில மொழிப்பாடத்தை விட கடினமாக இருந்ததாகவும், எனவே தேர்வர்களின் வாய்ப்பை சமநிலைப்படுத்த நார்மலைஷேசன் செய்ய வேண்டும் எனவும் தேர்வர்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் ராஜபூபதி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”பொது தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாட கேள்விகளின் கடினத்தன்மைக்கு இடையே நிறைய வேறுபாடு உள்ளது.
பொதுத் தமிழை தேர்வு செய்யும் தேர்வர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான புதிய தமிழ் பாடப் புத்தகம், பழைய தமிழ் பாடப் புத்தகம், 11, 12 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் பாடப்புத்தகம் ஆகியவற்றை முழுமையாக படிக்க வேண்டும்.
ஆங்கில மொழிப் பாடத்தை தேர்வு செய்பவர்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான புதிய ஆங்கில பாடப் புத்தகத்தை படித்தால் போதுமானது. அதுவும் முழுமையாக படிக்க வேண்டியதில்லை. பாடத்திட்டத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் படித்தால் போதுமானது.
இதனால் பாடத்திட்டத்திலே சமநிலையற்றத் தன்மை காணப்படுகிறது. ஒரு தேர்வர் பொது தமிழில் 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க ஒராண்டுக்கு மேல் படிக்க வேண்டும். ஆனால் ஆங்கில மொழிப் பாடத்தை தேர்வு செய்தவர்கள் 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க ஒரு மாதம் படித்தாலே போதுமானது.
அந்தவகையில், இந்த குரூப் 2 தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களுக்கு இடையே 5 முதல் 10 கேள்விகள் வரை கடினத்தன்மை அளவு வேறுபடுகிறது. எனவே இதனை சரிசெய்ய நார்மலைஷேசன் செய்ய வேண்டும்.
இதுதவிர, முதன்மைத் தேர்வுகளை ஆங்கிலத்தில் இல்லாமல், தமிழில் எழுதுபவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைப்பது இல்லை என்ற நிலையும் உள்ளது. இதனையும் சரி செய்ய வேண்டும்.” இவ்வாறு ராஜபூபதி தெரிவித்துள்ளார்.
இதேபோல், டி.ஏ.எஃப் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ள வீடியோவில், ”தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாட கேள்விகளின் கடினத்தன்மையில் வேறுபாடு உள்ளது. தமிழ் கடினமாகவும், ஆங்கிலம் எளிதாகவும் இருந்தாக தேர்வர்கள் கூறுகின்றனர். எனவே தேர்வாணையம் குழு அமைத்து கேள்விகளின் கடினத்தன்மையை ஆராய வேண்டும். மேலும் நார்மலைஷேசன் செய்ய வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“