தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய நடைமுறை மாற்றங்களை அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 12 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து, விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர், "தேர்வு முடிவடைந்ததும் ஜூலை 14 அன்று விடைத்தாள்கள் அனைத்தும் ட்ரங்குப் பெட்டிகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள்கள் முழுமையாகப் பாதுகாப்பான முறையில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன, எங்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உடைக்கப்பட்ட பெட்டிகளில் வேறு ஆவணங்கள் இருந்திருக்கலாம் என்றும், என்ன ஆவணங்கள் இருந்தன, எங்கே உடைக்கப்பட்டது, இதற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குரூப் 4 தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக, மதுரையில் தனியார் ஆம்னி பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் கேள்வித்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து பேசிய எஸ்.கே. பிரபாகர், மதுரை மாவட்ட ஆட்சியர் தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன் விவரங்கள்:
தாசில்தார்களுக்குப் பதில் டிஎன்பிஎஸ்சி நேரடிப் பொறுப்பு:
தற்போதைய நடைமுறையின்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் பிரதான கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து துணை கருவூலங்களுக்கும், தேர்வு மையங்களுக்கும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளால் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இனிமேல், தாசில்தார்கள் கேள்வித்தாள்களைக் கையாளும் நடைமுறை முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.
கருவூலங்களுக்கும், தேர்வு மையங்கள் அமைந்துள்ள முக்கிய நகரங்களுக்கும் கேள்வித்தாள்களைக் கொண்டு செல்லும் பணியை இனி டிஎன்பிஎஸ்சி நேரடியாக மேற்கொள்ளும். இது வருவாய் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புகளில் ஒப்படைக்கப்பட மாட்டாது.
அடுத்ததாக நடைபெறக்கூடிய தேர்வுகள் முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் தேர்வுகளின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.