டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில், மார்ச் மாதம் தொடங்கி ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ட்விட்டரில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி : தமிழக அரசு
இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.
இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை ஜனவரி 2023ல் தான் தேர்வாணையம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஜனவரி இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், சில நாட்களில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் தான் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரிசல்ட் வெளியிடப்படாததால், தேர்வர்கள் ரிசல்ட் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, நீண்ட விளக்கத்துடன் குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்தது. இந்தநிலையில், தற்போது மார்ச் மாதம் தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டது. தேர்வாணையம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவை கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து குரூப் 4 தேர்வு முடிவுகளும் மார்ச் முதல் வாரத்திலே வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரூப் 4 தேர்வு முடிவுகளுக்காக 18 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil