/indian-express-tamil/media/media_files/2025/03/18/vxCyokAmwc1390uAcotX.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், கடினமான பொது அறிவு பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் எளிதான பகுதியாக தேர்வர்களால் கருதப்படும். கணிதமும் ஒரளவு எளிதானதாக உணரப்படும். ஆனால் பரந்து விரிந்திருக்கும் பாடத்திட்டம் காரணமாக பொது அறிவு எப்போது கடினமான பகுதியாக கருதப்படும். ஆனால் சில டெக்னிக்களுடன் படித்தால் பொது அறிவு பகுதியிலும் அதிக மதிப்பெண் பெறலாம்.
பொது அறிவு பிரிவை பொறுத்தவரை, இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் தலைப்பில் 20 கேள்விகளும், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தலைப்பில் 20 கேள்விகளும், இந்திய அரசியலமைப்பில் 15 கேள்விகளும், இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கத்தில் 10 கேள்விகளும், புவியியலில் 5 கேள்விகளும் மற்றும் அறிவியலில் 5 கேள்விகளும் இடம்பெறும்.
எனவே எந்தப் பகுதியில் அதிக வினாக்கள் கேட்கப்பட உள்ளதோ, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் என விருட்சம் டி.என்.பி.எஸ்.சி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தகங்களை முழுமையாக படிப்பதை விட பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து படிக்க வேண்டும். தேர்வுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் தலைப்புக்கு 6 நாட்கள் ஒதுக்கி படியுங்கள். தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் தலைப்புக்கு 4 நாட்கள் ஒதுக்குங்கள்.
தமிழ்நாடு வரலாறு தலைப்புக்கு 5 நாட்கள் ஒதுக்கி படியுங்கள். அடுத்ததாக அரசியலமைப்புக்கும் 5 நாட்கள் ஒதுக்குங்கள். புவியியல் மற்றும் அறிவியல் தலைப்புகளுக்கு தலா 2 நாட்கள் ஒதுக்குங்கள். அடுத்ததாக இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் தலைப்புக்கு 3 நாட்கள் ஒதுக்கி படியுங்கள்.
இப்படி படித்தால் 30 நாட்களில் பாடத்திட்டத்தை முடித்து விடலாம். மேலும் 20 நாட்களுக்கு மேல் திருப்புதல் செய்ய நேரம் கிடைக்கும். இந்த முறையில் தயாரானால் பொது அறிவில் 75 கேள்விகளுக்கு 65 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.