TNPSC group 4 VAO exam preparation strategies to aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகள் வருகின்றன ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கடைசி நேர தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
குரூப் 4 தேர்வில் 200 வினாக்கள் இடம்பெறும். இதில் தமிழில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், கணிதப்பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம்பெறும்.
இதையும் படியுங்கள்: தமிழக போலீஸ் தேர்வு; பாடத்திட்டம், தேர்வுக்கு தயாராவது எப்படி?
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான வினாக்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் கேட்கப்படுவதால், இந்த பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் பள்ளிப் பாடப்புத்தகங்கள் என்பவை அடிப்படையானவை தான், எனவே பாடத்திட்டத்திற்கு ஏற்ப அதை தாண்டியும் வினாக்கள் கேட்கப்படலாம். எனவே கூடுதலாக 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ், வரலாறு, அரசியலமைப்பு உள்ளிட்ட சில பாடங்களையும் படித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு குறையாமல் படிப்பதற்காக ஒதுக்க வேண்டும். மீதம் உள்ள நேரங்களில் படித்ததை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். இந்த 8 மணி நேரத்தில் பாதிக்கும் மேலான நேரத்தை தமிழ் பகுதிக்கு ஒதுக்க வேண்டும். ஏனெனில் 100 வினாக்கள் அதிலிருந்து கேட்கப்படுகின்றன. மேலும் தமிழ் தான் நாம் அதிக மதிப்பெண்கள் எடுக்க கூடிய பகுதி.
தமிழ் பாடங்களை படிக்கும்போது எதையும் தவறவிடாமல் படியுங்கள். நூல், நூலாசிரியர் விவரங்கள், இலக்கணம், பெட்டிச் செய்தி, அடைப்புக்குறிக்குள் உள்ள தகவல்கள் என அனைத்தையும் படிக்க வேண்டும். திருக்குறள் போன்றவற்றை படிக்கும்போது, பொருள் அறிந்து படித்துக் கொள்ளுங்கள்.
தேர்வு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், புதிதாக எதையும் படிப்பதை தவிருங்கள். இதுவரை படித்ததை ஞாபகப்படுத்தி பாருங்கள்.
அடுத்ததாக முந்தைய ஆண்டு வினாக்களை பயிற்சி செய்து பாருங்கள். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள யூனிட் 8 மற்றும் 9 பாடங்களான, தமிழ் வரலாறு, இலக்கியம், மரபு, பண்பாடு மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் பகுதிகளிலிருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். நடப்பு நிகழ்வுகளை குறிப்பு எடுத்து வைத்து படித்துக் கொள்ளுங்கள்.
எனவே இந்த கடைசி நேரத்தில் தமிழுக்கு பாதி நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும், மீதமுள்ள நேரத்தில் கணிதம் மற்றும் பொது அறிவைப் படித்தால் சிறப்பாக இருக்கும். முடிந்தவரை படித்ததை நினைவுபடுத்தி பார்ப்பது மிகச் சிறப்பானது. மேலும், ஆன்லைனில் கிடைக்கும் வினாத் தொகுப்புகளை பயிற்சி செய்துபாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil