TNPSC Exam Scam: டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முறைகேடுகள் தொடர்பான கைது நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பணம் கொடுத்து தேர்வெழுதிய தேர்வர்கள், முறைகேடாய் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், இடைத் தரகர்கள், இடைத் தரகர்களின் வாகன ஓட்டுனர்கள், டிஎன்பிஎஸ்சி பணியாளர்கள் போன்ற பல மட்டத்திலும் கைது நடவடிக்கை தொடர்கிறது.
இந்த முறைகேடுகளுக்கு முக்கியப் புள்ளியாக கருதப்பட்ட ஆயுதப்படை காவல்பிரிவு பணியாளர் சித்தாண்டி என்பவரை இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி கைது செய்து விசாரித்து வருகிறது. இவரிடம் நடத்தபப்ட்ட முதற்கட்ட விசாரணையில், முறைகேகேடாய் அரசு பணியாளர்களான 500க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் தெரிய வந்துள்ளது.
மேலும், 2017 குரூப் 2ஏ தேர்வில் சட்ட விரோதமாக தேர்ச்சி பெற்று, அரசு பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரிடம் இருந்து ரூ .82.5 லட்சம் சித்தாண்டி வசூலித்துள்ளார் என்று சிபி-சிஐடி குறிப்பிட்டது. இதேபோல், 15 பேரிடமிருந்து தலா ரூ .7.5 லட்சம் வசூலித்து ஜெயக்குமாரிடம் கொடுத்தார். இதில் ஐந்து பேர் மட்டும் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
ஆயுத ரிசர்வ் கான்ஸ்டபிள் டி.பூபதி கைது:
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஆயுத ரிசர்வ் கான்ஸ்டபிள் டி.பூபதி என்பவரை நேற்று சிபிசிஐடி காவல் பிரிவு கைது செய்துள்ளது. 2017 குரூப் 2-ஏ டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தோன்றிய ஐந்து பேரிடமிருந்து மொத்தம் ரூ .55 லட்சம் வசூலித்து, ஜெயக்குமார் உதவியுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த பூபதியையும் சேர்த்தால், காவல்துறையில் இருந்து மட்டும் இதுவரை 3 பேர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதாகியுள்ளனர்.
வணிகவரித்துறை உதவியாளர் கைது:
தற்போது, வணிகவரித்துறையில் உதவியாளராக இருக்கும் வி.கார்த்திக் என்பவரையும் சிபிசிஐடி காவல் பிரிவு கைது செய்துள்ளது. இவர் ஜெயக்குமார் மூலம் சட்ட விரோதமாக அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக வி.கார்த்திக் 9 லட்சம் ரூபாயை லஞ்சப் பணமாக கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன் ஜாமீன் மனு: தலைமை செயலகத்தில் அமைந்திருக்கும் நிதி துறையில் உதவியாளராக பணி புரியும் டி.கவிதா டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தம்மை கைது செய்யக் கூடாது என்று முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுவில், தாம் மகப்பேறு விடுப்பில் இருப்பதாகவும், கடந்த மாதம் ஜனவரி 23 ஆம் தேதியன்று ஒரு ஆண் குழந்தையை பிரசவித்ததாகவும் கூறியுள்ளார்.
2017 ஆம் நடந்த குரூப் II தேர்வை ராமேஸ்வரம் செயின்ட் ஜோசப்பின் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய இவர், மாநில அளவில் 48 வது இடத்தையும், வகுப்புவாத தரவரிசையில் ஆறாவது இடத்தையும் பெற்றார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட எம். விக்னேஷ், சுதா, சுதா தேவி ஆகியோ டி.கவிதாவின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயக்குமார் குறித்த செய்திகள்: ஒட்டு மொத்த முறைகேடுகளுக்கும் அச்சாணியாக இருந்ததாகக் கருதப்படும் ஜெயக்குமாரை காவல்துறையினர் நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்கு ஜெயக்குமாரின் புகைப்படம் அனுப்பப் பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தை தாண்டி ஆந்திர , கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தேடுதல் தீவிரமாக்கப்பட்டுள்ளது.