/indian-express-tamil/media/media_files/2025/09/21/tamilnadu-police-2025-09-21-13-28-32.jpg)
தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் தாலுகா மற்றும் ஆயுதப்படையில் காலியாக உள்ள 1,299 காவல் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதற்கான ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் தேர்வு நடைபெறவிருந்தது.
இந்தநிலையில், காவலர் காலிப்பணியிடங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பினால், சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. எனவே, ஜூன் மாதம் நடைபெறவிருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் தேர்வானது இனிவரும் காலங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வாக இருக்கும், அதாவது காவலர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு இருக்காது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, தேர்வு எப்போது நடைபெறும் என தேர்வர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட எஸ்.ஐ தேர்வு வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்விற்கு சில நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.